அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்
1/24/2021 6:13:45 PM
புதுடெல்லி: அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியா தடுப்பூசி திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் முன்னுரிமை அடிப்படையில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கின. கிட்டதிட்ட கடந்த 8 நாட்களில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது. தடுப்பூசி தொடர்பான ‘கோ-வின்’ செயலியும் நேற்று முதல் மேம்படுத்தப்பட்டது.
இந்த செயலியை பார்ப்போரின் எண்ணிக்கை 2,30,000 தாண்டியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘எவர் வேர்ல்ட் இன் டேட்டா’ நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், ‘நோய்த்தடுப்பு மருந்துகளை மக்களுக்கு அளிப்பதில் இந்தியா மிக விரைவாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஒன்பது நாட்களில் முடிக்க வேண்டிய தடுப்பூசியை பணியை ஆறு நாட்களில் இந்தியா முடித்துள்ளது. முதற்கட்டமாக 30 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இந்தியா இலக்கு நிர்ணயத்துள்ளது. அதன்படி நேற்று வரை 55.3% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ‘தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மூத்த மருத்து நிபுணர்கள், மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சுகாதாரப் பணியாளர்கள் தற்போது ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், சில இடங்களில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. சட்டீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்கள் வரும் வாரத்தில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும்.
முன்னதாக 12 மாநிலங்களில் இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு, பலருக்கு போடப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, சனிக்கிழமை வரை நாடு முழுவதும் 123 பேர் பாதகமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 11 பேர் மட்டுமே தடுப்பூசி பெற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 16ம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் இறக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது’ என்றனர்.