சென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின
1/20/2021 5:08:48 PM
சென்னை: முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கிறிஸ்தவ மத போதகரான டி.ஜி.எஸ்.தினகரன், கடந்த 1983ம் ஆண்டு ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டங்கள் நடத்தி வந்தார். பின்னர் 1986ம் ஆண்டு முதல் கோவையில் காருண்யா பல்கலைக்கழகத்தை தொடங்கி நடத்தி வந்தார். இவரது பிரச்சார கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மிகவும் சக்திவாய்ந்த மத போதகராக டி.ஜி.எஸ்.தினகரன் திகழ்ந்து வந்தார். இதனால் தமிழகம் முழுவதும் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த 2008ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரன் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் தினகரன் தனது தந்தை நடத்திய ‘இயேசு அழைக்கிறார்’ குழுமம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தை தற்போது வழிநடத்தி வருகிறார். பால் தினகரன் நடத்தும் குழுமத்திற்கு வந்த நிதிக்கு முறையாக மத்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதைதொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிந்து ஒரே நேரத்தில் பால் தினகரன் நடத்தும் சென்னை பாரிமுனை,
அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட ‘இயேசு அழைக்கிறார்’ பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. அதேபோல் பிரச்சார கூடங்கள், காருண்யா பல்கலைக்கழகத்தில் இருந்து ஊழியர்கள் யாரையும் அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. பணிக்கு வந்த ஊழியர்கள் யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த சோதனையில் இயேசு அழைக்கிறார் குழுமத்திற்கு வந்த நிதி தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கட்டுக்கட்டாக பணமும் சிக்கின. இந்தச் சோதனை நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு வருமான வரி முறைகேடு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.