தமிழர் திருநாள்: களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்: கடைகளில் அலைமோதும் கூட்டம், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
1/13/2021 5:28:59 PM
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை நாளை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் இன்று மாநிலம் முழுவதும் பல நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள். அதன்படி, தை திங்கள் முதல் நாளான வியாழக்கிழமையான நாளைய தினத்தை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுவார்கள். அதேபோன்று புத்தாடை அணிந்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (5 நாட்கள்) அரசு விடுமுறையாகும். இதையொட்டி பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று முதல் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழக அரசும், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று வரை சுமார் 3 லட்சம் பேர் அரசு பஸ்சில் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதுதவிர ரயில், விமானம், கார்களிலும் பல லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இவர்கள் உற்சாகத்துடன் புதுத்துணிகள் வாங்கினர். இதனால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் இன்றும் கூட்டம் அலை மோதியது.
அடுத்து, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் இன்று முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.400 வரை விற்கப்பட்டது. இதே கரும்பு ஊர்களில் ரூ.500க்கு விற்கப்பட்டது. அதன்படி, ஒரு கரும்பின் விலை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. அதேபோன்று மஞ்சள் கட்டும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வழக்கமாக நாளை பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், தொடர்ந்து காணும் பொங்கல் என்று தமிழகத்தில் வரிசையாக கொண்டாடுவார்கள். இதை கொண்டாட பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தமிழக அரசு 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை செல்ல தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒன்று வீட்டில் இருக்க வேண்டும் அல்லது தியேட்டர் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
'கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்'
கோயம்பேடு உருளை கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் கரும்பு விற்பனை களை கட்டியுள்ளது. இன்று அதிகாலை 50 லாரிகளில் கரும்புகள் வந்து இறங்கியுள்ளது. தேனி, பண்ருட்டி, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இதில் தேனி கரும்பு ஒரு கட்டுக்கு ரூ.450க்கும், மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கரும்பு ஒரு கட்டுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.
இதபோன்று பொங்கல் கொண்டாடும் போதும் சாங்கியத்துக்காக குலை மஞ்சளை பயன்படுத்துவார்கள். இந்த குலை மஞ்சள் திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் ஆந்திராவில் இருந்து வந்துள்ளது. இன்று காலை மட்டும் 20 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. ஒரு குலை மஞ்சள் ரூ.30 முதல் ரூ.45 வரை விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பதால், சில்லறை வியாபாரிகள் கரும்பு மற்றும் மஞ்சளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.