கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றி வரி செலுத்த சலுகை அவகாசம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1/12/2025 5:53:28 PM
சென்னை: கேரள அரசின் முன்னுதாரணத்தைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பின்பற்றி வரி செலுத்தச் சலுகை-கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கொரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும்-அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31 வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின்கட்டணம் 50 சதவீத தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது.
சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திரைத்துறையைக் கனவுத் தொழிற்சாலை என அழைக்கின்றனர். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில்கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறை மட்டுமின்றி, கொரோனா பேரிடர் காலத்தில் பாதிப்பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட்டிடும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'முதல்வருக்கு ஸ்டாலின் பதில்'
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மு.க.ஸ்டாலின் கிராமசபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்னையைத் தீர்க்கப் போகிறாரா?-என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதலமைச்சர்! ஆம் நான் பிரச்னைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்: கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் அடிமை எம்எல்ஏ-வால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்! யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதலமைச்சர் பழனிசாமி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.