மேலடுக்கு சுழற்சி காரணமாக பொங்கலன்று தென்மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
1/12/2025 5:49:35 PM
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக பொங்கல் அன்று தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: இலங்கை மற்றும் குமரி பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும். கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை (புதன்கிழமை) தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். அதேபோல் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் (86 டிகிரி), குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை (75.2 டிகிரி) ஒட்டியும் இருக்கும். நாளை(13ம் தேதி) கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.