2 நாட்கள் பயணமாக சென்னை வந்தார்..!! அமித் ஷா-எடப்பாடி இரவு சந்திப்பு: வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு
11/21/2020 5:36:16 PM
சென்னை: பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று பிற்பகல் சென்னை வந்தார். அவர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இன்று இரவில் அமித்ஷாவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுகிறார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் சீட் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து எல்லை பாதுகாப்பு படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் மதியம் 1.40 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தார். விமானநிலையத்தில், வாழை தோரணம், கரும்பு தோரணம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வளைவுகள் அமைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் நாதஸ்வரம், கரகாட்டம், தப்பாட்டம் அடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் சக்ரவர்த்தி, எம்.என்.ராஜா, பொது செயலாளர் கரு.நாகராஜன், மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மாநில செயலாளர் டால்பின் தர் ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து அவர் கார் மூலம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் மதியம் உணவை முடித்து கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 4.15 மணியளவில் அவர் ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு மாலை 4.25 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். கலைவாணர் அரங்கில் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.சி. சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இரவு 6.05 மணியளவில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் கார் மூலம் லீலா பேலஸ் ஓட்டல்களுக்கு ெசல்கிறார். அங்கு மாலை 6.30 மணியளவில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாநில அணி பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார். அப்போது வர உள்ள சட்டப்பேரவை தொடர்பாக கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்தியில் பெரும் பலத்துடன் ஆட்சியில் இருக்கிறோம். இதை மனதில் வைத்து வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அப்போது அவர் பாஜகவினருக்கு அறிவுரை வழங்குகிறார். முன்னதாக இரவில் ஓட்டலில் தங்கியிருக்கும் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மத்தியில் உள்ள பாஜகவால் தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி இன்னும் நீடித்து வருகிறது. எனவே, வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 50 இடங்களை வழங்க வேண்டும் என்றும் அப்போது அமித்ஷா வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இதில் அதிமுக, பாஜக கூட்டணி சீட் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் தான் அதிமுக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அப்படியிருக்கும் போது வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் என்பது அதிமுகவுக்கு வாழ்வா, சாவா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பாஜகவையும் கூட்டணியில் சேர்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வி தான் நமக்கு ஏற்படும் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில் அதிக இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கினால் அதிமுகவில் பூகம்பம் வெடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமித்ஷா, எடப்பாடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தொடர்ந்து இரவில் பல முக்கிய பிரமுகர்கள் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளனர். இரவில் அமித்ஷா ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை 10 மணியளவில் அவர் ஓட்டலில் இருந்து சென்னை விமானம் நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி சென்னை விமானம் நிலையம் முதல் தங்கும் ஓட்டல், நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் அதாவது துணை பிரதமருக்கு இணையான அளவில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடம், தங்கும் இடத்தில் ஒரு கூடுதல் கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரை சந்திக்க உள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர். அமித்ஷாவின் சென்னை வருகையையொட்டி சென்னை நகர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.