‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் பிரசாரம்
11/20/2020 5:03:12 PM
* முதற்கட்டமாக திருக்குவளையில் இன்று உதயநிதி தொடங்குகிறார்
* தமிழகம் முழுவதும் 15 தலைவர்கள் 75 நாட்கள் பிரசாரம்
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனவரி முதல் வாரம் முதல் தன் தேர்தல் பிரசார பயணத்தை துவக்குகிறார். 75 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து ”தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பிலான ”2021-சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள்” வாயிலாக கட்சியினர், தொண்டர்களிடையே மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வருகிறது. கருத்துக்களை கேட்ட பின்னர் அந்த குழு அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் வழங்கும். அதன் பிறகு அந்த குழுவினர் ஆராய்ந்து தேர்தல் அறிக்கையாக தயாரித்து மு.க.ஸ்டாலினிடம் வழங்குவார்கள். அவர் அதை வெளியிடுவார். இந்நிலையில், ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ எனும் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்து வரும் 75 நாட்கள் 15 கட்சி தலைவர்கள் 15 ஆயிரம் கி.மீட்டர் வரை வரை பயணிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 1,500 கூட்டங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடன் நேரடி கலந்துரையாடல் நடக்கிறது. இந்த பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசு கடந்த 10 ஆண்டு கால முறையற்ற நிர்வாகம் குறித்து மக்களிடம் சுட்டிகாட்டப்படுவதுடன்அவர்களின் குறைகளையும் துன்பங்களையும் நேரடியாக கேட்டறிகின்றனர். அடுத்து ஆட்சி அமைக்க போகும் அரசின் மீதான மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் திமுக உயர்மட்ட தலைவர்கள் கேட்டறிகின்றனர்.
இந்த செயல்பாட்டின் போது, அதிமுக அரசின் அட்டூழியங்களையும், நிர்வாக சீர்கேடுகளையும் நிராகரித்து புதிய விடியலை நோக்கி நடைபோடுவோம் எனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கத்தை மக்களிடம் இத்தலைவர்கள் எதிரொலிக்கின்றனர். இது குறித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: மோசமான நிர்வாகம், மத்திய அரசின் காலில் மண்டியிட்டு மாநில உரிமைகளை தாரைவார்த்து கொரோனா பேரிடர் காலத்திலும் ஊழலிலே கவனம் செலுத்தி மக்களின் உயிரை பறித்து முன்யோசனையோ, கலந்தாலோசனைகளோ இன்றி அறிவிப்புகளை வெளியிடுவது,
பின் அதை திரும்ப பெறுவதுமாக என பல்டி அரசாக செயல்படுவது போன்ற அதிமுக அரசின் அலங்கோலங்களை கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் எண்ணிலடங்கா இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவற்றை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுடன் ஒன்றிணைந்து வளர்ச்சியை நோக்கி திமுக பணியாற்றும். தமிழகம் இழந்த நல்லாட்சியை மீண்டும் நிலை நிறுத்தும். அதற்கான தொடக்கமாக இந்த பிரச்சாரம் அமையும். பல்லாயிரக்கணக்கான மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இந்த அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ெபரும் பொறுப்பினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த பரப்புரை இன்று மதியம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்குகிறார். இந்த பிரச்சார பயணத்தில் முதற்கட்டமாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் லியோனி, முனைவர் சபாபதி மோகன் மேற்கொள்கின்றனர். இரண்டாவது கட்டமாக டிசம்பர் 2ம் தேதி முதல் துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், தேர்தல் பணிக்குழு இணை தலைவர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
மூன்றாம் கட்டமாக டிசம்பர் 11ம் தேதி முதல் எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், செந்தில்குமார், மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், எம்பி பார்த்திபன், கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வரும் 29ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணைப் பொதுச் செயலா ளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.