சவுகார்பேட்டையில் 3 பேர் கொலை விவகாரம்; கொலையாளிகள் தங்கிய வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை
11/19/2020 5:28:10 PM
திருப்போரூர்: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வசித்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தலீல் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் இவர்களின் மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி இரவு அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் ஆகியோரும் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த கூலிப்படையினர் ரவீந்திரநாத், விஜய் உத்தம், கமல் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சென்னை மாநகர போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, கொலை செய்துவிட்டு காரில் தப்பிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம், கமல் ஆகியோரை கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட ஷீத்தல்குமார் மற்றும் ஜெயமாலா ஆகியோருக்கிடையே விவாகரத்து வழக்கு புனேயில் நடைபெற்று வருவதும், இதில் நஷ்டஈடாக 4 கோடி ரூபாய் கேட்டதும் அதற்கு ஷீத்தல்குமார் மற்றும் அவரது தந்தை தலீல் சந்த் ஆகியோர் மறுப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. இதற்கு பழிக்குப் பழி வாங்க கொலை நடந்திருப்பதும் தெரிய வந்தது. இந்த கொலையை செய்வதற்காக திருப்போரூர் அருகே அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மனைப்பிரிவு ஒன்றில் தனி வீடு எடுத்து காட்டூர் வனப்பகுதியில் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொண்டதும் தெரியவந்தது. கொலையாளிகள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
நேற்று சென்னை மாநகர போலீசாரும், திருப்போரூர் போலீசாரும் அம்மாப்பேட்டை பகுதியில் இருந்த அந்த வீட்டை கண்டுபிடித்தனர். சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் வசித்து வந்த அந்த வீட்டின் உரிமையாளர் கணேசனை வரவழைத்த போலீசார் வீட்டை கொலையாளிகளுக்கு வாடகைக்குவிட்டது எப்படி என்று விசாரணை மேற்கொண்டனர். அதற்கு கணேசன், தான் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், கடன் வாங்கி இந்த வீட்டை கட்டியிருப்பதாகவும், வங்கிக் கடனை அடைப்பதற்காக வாடகைக்குவிட நினைத்து ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்ததாகவும் தெரிவித்தார். ஆன்லைன் மூலமாகவே வடமாநிலத்தவர் தன்னை அணுகியதாகவும் ஆதார் அட்டை கொடுத்ததாலும், தம்பதியர் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை மாநகரப் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிகள் மூவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று திருப்போரூர் அடுத்த அம்மாப்பேட்டை பகுதியில் கொலைக் குற்றவாளிகள் தங்கிய வீட்டை சோதனையிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அந்த வீட்டில் எத்தனை பேர் தங்கி இருந்தனர், அங்கு வேறு துப்பாக்கிகள் உள்ளதா என்பது பற்றி விசாரிக்கவும், சோதனையிடவும் சென்னை போலீசார் இன்று அந்த வீட்டிற்கு செல்ல உள்ளனர். இந்த விசாரணையில், துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது, கொலை செய்ய பயிற்சி எடுத்தது எப்படி என்பது போன்ற விபரங்கள் தெரிய வரும்.