பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
10/22/2020 4:55:18 PM
பாட்னா: பீகார் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி துவங்கி, 3 கட்டங்களாக நவ.7 வரை நடைபெற உள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக நாளை பிரதமர் நரேந்திர மோடி, பாகல்பூரில் முதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முன்னதாக பாஜவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, பாட்னாவில் வெளியிட்டார்.
பாஜவின் இந்த தேர்தல் அறிக்கையின் தாரக மந்திரமாக ‘தன்னிறைவு பெற்ற பீகார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஒரு லட்சியம், கிராமங்கள், நகரங்கள், தொழில் நிறுவனங்கள் கல்வி மற்றும் விவசாயம் ஆகிய 5 துறைகளுக்கான நிச்சயம் நிறைவேற்றப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 11 உறுதிகள் இடம் பெற்றுள்ளன. ஜிடிபி, மின் உற்பத்தி மற்றும் தரமான சாலைகள் உள்ளிட்ட 11 அம்ச வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் பேருக்கு வேலை என்றும் பாஜ அறிவித்துள்ளது. 10 லட்சம் பேருக்கு வேலை என்ற ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் பிரசாரத்தை, ஒருபுறம் கடுமையாக விமர்சித்து வரும் பாஜ, தற்போது 19 லட்சம் பேருக்கு வேலை என்று அறிவித்துள்ளது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் பீகாரில் அமைய உள்ள ஐடி நிறுவனங்கள் மூலம் மேலும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பாஜ அறிவித்துள்ளது.
கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் இது முதலாவது அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது.
சரியான அரசியல் தெளிவு கொண்ட, ஒருங்கிணைந்த உணர்வுப்பூர்மான மக்களை கொண்டது பீகார் மாநிலம். நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகள் எவை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. எங்களுடைய இந்த தேர்தல் அறிக்கை குறித்து, யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். நாங்கள் கூறியவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையுடன், பதிலளிக்க தயாராக உள்ளோம்.
மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள நாங்கள் பீகார் மக்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். 10 லட்சம் மகளிர் குழுக்கள் மூலம் மாநிலத்தில் 1.20 கோடி பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி உள்ளோம். மகளிர் குழுக்களுக்கு மைக்ரோ நிதி நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி பெண்களை, சுயமாக வருமானம் ஈட்டச் செய்வோம் என இப்பொழுதும் உறுதி கூறுகிறோம்.
பள்ளிகள் துவங்கி உயர் கல்வி நிறுவனங்கள் வரை 3 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்துவோம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்விகளில் அனைத்து பாடங்களும் இந்தி மொழியிலும் கற்பிக்க, தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.