சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்
10/22/2020 4:53:08 PM
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. மறுநாள் தொடங்கி 21ம் தேதி வரை தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதுவும் ஆன் லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முன்பதிவு செய்யும் போது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் இணைக்க வேண்டும். மேலும் சபரிமலை வந்த பின்னரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில் 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடுத்த மாதம் நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. மண்டல கால பூஜைகளின் போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் 2000 பக்தர்களும், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5000 பக்தர்களும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சபரிமலை சிறப்பு ஆணையாளர் மனோஜ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம் சில மாற்றங்களை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
மண்டல, மகரவிளக்கு பூஜைகளின் போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட கூடாது. கொரோனா நிபந்தனைகளின் பேரில் சபரிமலையில் ஆச்சாரங்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது. பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் பகுதியிலேயே நிறுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சபரிமலையில் குறைவான பக்தர்களே வருவார்கள் என்பதால், 15 இருக்கைகள் கொண்ட பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்கலாம். பம்பையில் பக்தர்களை இறக்கி விட்டுவிட்டு வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தலாம். நிலக்கல்லில் பக்தர்கள் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கபபட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்க கண்டிப்பாக அனுமதி அளிக்க வேண்டும். தரிசனத்திற்கு செல்லும் போதோ, தரிசனம் முடிந்து திரும்பும் போதோ பக்தர்கள் ஓய்வு எடுக்காமல் செல்ல முடியாது. அன்னதானத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவு கொடுக்காமல் இருப்பது முறையல்ல. எனவே எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
சபரிமலையில் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. அரசு மற்றும் தேவசம் போர்டின் விருந்தினர்களாக வருபவர்களை தரிசனத்திற்கு எப்படி அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் எல்லா தரிசனத்திற்கும் ஐகோர்ட் பெர்மிஷன் கொடுத்தால்தான் நடைமுறைபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.