மருத்துவக் கல்வியைப் போன்று இன்ஜி. படிப்புக்கு நுழைவு தேர்வு தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
10/22/2020 4:49:24 PM
சென்னை: மருத்துவக் கல்வியைப் போன்று பிஇ, பிடெக் மற்றும் பொறியியல் தொடர்பான பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறை கூடாது என்று தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல் படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த புதிய கல்விக் கொள்கை மீது பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு பின்னர் மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பேரில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறைகளின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்து விவாதித்து வந்த நிலையில், பொதுமக்களிடமும் கருத்து கேட்டுள்ளன. அதை அடிப்படையாக கொண்டு தமிழக உயர்கல்வித்துறை மத்திய அரசுக்கு, தமிழகத்தின் கருத்து மற்றும் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை பல்கலைக் கழக மானியக் குழு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்விநிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக் கழகத்துக்கும் பல்கலைக் கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் செயலாளர் அபூர்வா, புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துரைகள், பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், பல்வேறு பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள்பற்றியும், புதிய கல்விக் கொள்கையின் படி அந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதை ரத்து செய்துவிட்டு, நுழைவுத் தேர்வு என்ற நடைமுறையை கொண்டு வந்தால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்றும் அந்த கடிதத்தில் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.