சட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: மாலையில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
10/21/2020 5:02:42 PM
சென்னை: வரும் சட்டசபை தேர்தல் குறித்து கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தமிழக சட்டசபை ெபாதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர், கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், காணொலி காட்சி மூலமாக பேசி வருகிறார். திமுகவினரும் தேர்தல் வேலைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் அவர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். திமுக தலைமையிலான கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் 60 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு குறைந்த தொகுதிகளே கிடைத்தது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதையும் திமுகவின் கோட்டையாக மாற்ற மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அதனடிப்படையில் தேர்தல் பணிகள் குறித்தும், வெற்றி வியூகங்களை வகுப்பது குறித்தும் முதல் கட்டமாக கொங்கு மண்டல நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கொங்கு மண்டல மக்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் திமுக நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சட்ட சபை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற தீவிரமாக பணியாற்றுவது குறித்தும் மு.க.ஸ்டாலினிடம் கொங்கு மண்டல நிர்வாகிகள் உறுதியளித்தனர். இன்று மாலை 4 மணியளவில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
போலீசாருக்கு வீரவணக்கம்
காவலர் வீர வணக்க தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: காவல்துறையில் பணியாற்றி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வீரமரணமடைந்த போலீசாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் மற்றும் மாநிலத்தின் உள்நாட்டு பாதுகாப்பில் பொது அமைதியை நிலைநாட்டுவதில் உயிர் நீத்த போலீசாருக்கு குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர்நீத்த தியாக சீலர்களான போலீசார் அனைவருக்கும் திமுக சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.