சொப்னாவை நன்கு தெரியும்: பினராயி விஜயன் பேட்டி
10/14/2020 5:29:03 PM
திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரக துணைத்தூதர் பலமுறை கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது வீட்டில் தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது நானும் உடன் இருந்தேன் என்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்த போது சொப்னா கூறினார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியது: அமீரக துணைத்தூதர் பலமுறை எனது வீட்டுக்கு வந்தது உண்மைதான். அவருடன் அவரது செயலாளர் என்ற முறையில் சொப்னாவும் வந்தார். இதனால் அவரை எனக்கு நன்கு தெரியும். சொப்னாவுக்கும், சிவசங்கருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் தினமும் 250 பேரை மட்டும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே 6 நாட்களுக்குமான தரிசன முன்பதிவு முடிந்துவிட்டது. மண்டல காலத்திலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும் என்றார்.