கேரள தங்க கடத்தல் வழக்கு சிவசங்கரிடம் ‘கிடுக்கிப்பிடி’ இன்றும் தொடர்கிறது
10/10/2025 5:49:06 PM
திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் நேற்று சுங்க இலாகாவினர் 11 மணிநேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்கிறது. தங்க கடத்தல் தொடர்பாக, கடந்த சில தினங்களாக சுங்க இலாகா நடத்திய விசாரணையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு எதிராக சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து நேற்று காலை கொச்சி சுங்க இலாகா தலைமையகத்தில் சிவசங்கர் ஆஜரானார். அவரிடம் காலை 11 மணிமுதல் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தங்க கடத்தல், 17 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழம் விநியோகம் மட்டுமல்லாது, சொப்னாவுடன் வெளிநாட்டுக்கு பறந்த விஷயங்கள், கரன்ஸிகள் கடத்தப்பட்டதா என்பன குறித்தும் அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர்.
மேலும் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் சிவசங்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சொப்னாவுடனான பணப்பரிமாற்ற விபரம், வங்கி லாக்கர் எடுத்து கொடுத்தது ஏன், வங்கி மற்றும் லாக்கரில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் எப்படி வந்தது, சுங்கவரி செலுத்தாமல் துபாயில் இருந்து பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்தது எப்படி, தூதரக தேவைக்காக கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்ைத வெளிநபர்களுக்கு எப்படி கொடுக்கப்பட்டது, இறக்குமதி செய்யப்பட்ட 17 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழங்களில் 9,000 கிலோ மட்டுமே மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6,000 கிலோ எங்கு சென்றது என்பன உள்ளிட்ட விபரங்களை சிவசங்கரிடம் கேட்டனர்.
காலை 11க்கு தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை 11 மணிநேரம் தொடர்ந்து நடந்தது. நேற்றைய விசாரணையில் பல முக்கிய விபரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிவசங்கர் இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்றும் சுங்க இலாகா அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவசங்கரிடம் ஏற்கனவே சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை தலா ஒருமுறையும், என்ஐஏ 3 முறையும் விசாரணை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு அச்சுறுத்தல் இந்த வழக்கில் 4வது முக்கிய நபரான சந்தீப் நாயர் அப்ரூவராக மாறியுள்ளார். இவர் தங்கம் கடத்தல் தொடர்பான அனைத்து விபரங்களையும் ரகசிய வாக்குமூலமாக அளித்துள்ளார். இந்த நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், திருச்சூரில் தற்போது அடைக்கப்பட்டுள்ள மத்திய சிறையில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபோல இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்தபா, அப்துல் அசீஸ் ஆகிய இருவரும் என்ஐஏவிடம் அப்ரூவராக மாறியுள்ளனர். இவர்களும் தங்கம் கடத்தல் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளனர். ேமலும் தங்கம் கடத்தலில் ‘உபா’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை 6 மாதங்கள் நீதிமன்ற காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என என்ஐஏ மனுதாக்கல் செய்துள்ளது.