கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு
9/29/2020 5:14:25 PM
சென்னை: கொரோனா ஊரடங்கிற்கு பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும்நிலையில், சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது பற்றி என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அக்டோபர் 5ல் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது மற்றும் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை முறைப்படுத்துவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும், கலங்கரை விளக்கத்திலிருந்து பெசன்ட் நகர் வரை செல்லும் பாதையில் சேதமடைந்துள்ள பாலத்தை மீண்டும் அமைப்பது குறித்தும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா? என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், பொதுமக்களை இன்னும் அனுமதிக்கவில்லை.
கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ம் தேதி தெரிவிக்க வேண்டும். மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.