மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்
9/28/2020 5:02:55 PM
* காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின், சென்னையில் வைகோ, கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன்
* தஞ்சையில் முத்தரசன், கடலூரில் திருமாவளவன் பங்கேற்பு
சென்னை: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் சார்பில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பினார். சென்னையில் வைகோ, கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன், தஞ்சையில் முத்தரசன், கடலூரில் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 3 சட்டங்களுக்கு எதிராக கடந்த 25ம் தேதி விவசாயிகள் சார்பில் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழகத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் எதிரான ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விதிகளை மீறி, 3 வேளாண் கேடு மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் செப்டம்பர் 28ம் மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 70 மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் 50 இடங்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 3500 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் அனைத்து விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வணிக சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் அம்பியில் ஒரு தோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ வரவேற்றார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கமலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அல்லா பக்ஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ஷாஜகான், திராவிடர் கழக மாவட்ட அவைத்தலைவர் அசோகன் உள்ளிடோர் கலந்து கொண்டனர். சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவி பச்சமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் வள்ளூவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏ எம்.கே.மோகன், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, மா.பா.அன்புத்துரை, மதன்மோகன், ஏழுமலை, மயிலை த.வேலு, பரமசிவம், ராமலிங்கம், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், ஐ.கென்னடி, தி.நகர் சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் முன்னிலை வகித்தார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் திமுக எம்பிக்கள் வில்சன், கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் உ.பலராமன், செல்வபெருந்தகை, திமுக பகுதி செயலாளர்கள் மருது கணேஷ், சுந்தரேசன், ஜெபதாஸ் பாண்டியன், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர்கள் சையது, எஸ்.கே.வீராரெட்டி, டி.கே.மூர்த்தி மற்றும் நாஞ்சில் பிரசாத், டெல்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல தஞ்சாவூர்-இரா.முத்தரசன், திருச்சி-கே.எம்.காதர் மொய்தீன், கடலூர்-திருமாவளவன் எம்.பி, தாம்பரம்- எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை-ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். மற்ற மாவட்டங்களில் அந்தந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணியினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வணிக சங்கங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ,’ விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்ப பெறு’ என்ற வாசகத்துடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.