72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி
9/26/2020 6:13:24 PM
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர், பொதுமக்கள் திரண்டனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. நுரையீரல் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ம்தேதி மாலை மீண்டும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். இந்த தகவலை அறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நேற்றிரவு 8 மணிக்கு நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பியின் ரசிகர்கள், அவரது உடலை கொண்டு சென்ற வாகனத்தின் பின்னால் பைக்குகளில் பின்தொடர்ந்து சென்றனர். இரவு 10.45 மணிக்கு தாமரைப்பாக்கத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. சுமார் 3 மணி நேரம் சாலை மார்க்கமாக வந்தபோது மக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முழு போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு அறிவித்தார்.
தாமரைப்பாக்கத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஊர் மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது. ஆனால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்தனர். இதனிடையே இன்று அதிகாலை 5 மணி முதல் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி சாமுண்டீஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், போலீஸ் எஸ்பி அரவிந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் யாதவ், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருப்பதி தொகுதி எம்எல்ஏ கருணாகரரெட்டி, நெல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணா ரெட்டி, தடா தொகுதி எம்எல்ஏ சஞ்சீவி, நடிகர்கள் அர்ஜூன், ரகுமான், சமுத்திரக்கனி, மயில்சாமி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சின்னத்திரை நடிகர் சுதாகர், கல்யாணமாலை மோகன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் தீனா, தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் அமீர், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், திண்டுக்கல் லியோனி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தில் வந்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 10.30 மணி வரை தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எஸ்பிபி மனைவி சாவித்திரி, மகன் எஸ்பிபி.சரண், மகள் பல்லவி, சகோதரி சைலஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதற்கு பிறகு உடல் அடக்கம் செய்வதற்கான சடங்குகள் நடந்தது. முழு போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. மற்றும் 2 பிகிலர் ஆகியோர் உத்தரவுகள் வழங்க 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர். இதனால் 72 குண்டுகள் முழங்க பகல் 12 மணியளவில் பண்ணை தோட்டத்தில் எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிவன் கோயில் அருகே அடக்கம்
தாமரைபாக்கத்தில் உள்ள சிவன் கோயில் அருகில்தான் எஸ்பிபி.யின் பண்ணை வீடு உள்ளது. இந்த கோயில் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘எஸ்பிபி, ஏராளமான சிவன் பாடல்கள் பாடியுள்ளதால் அவருக்கு சிவன் கோயில் அருகே அவரது உடலை அடக்கம் செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது’ என்று பொதுமக்கள் உருக்கமாக கூறினர்.