112 வது பிறந்தநாள் விழா; அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
9/15/2020 5:05:54 PM
சென்னை: அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று காலை மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்புறம் உள்ள அண்ணா சிலை மலர்கள், கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8 மணியளவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக தொண்டர் அணியினர் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். அதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கும், கலைஞர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன், வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி மற்றும் கே.கே.நகர் தனசேகர், பகுதி செயலாளர் மா.பா.அன்பு துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.