விளை நிலத்தில் உயரழுத்த மின்கம்பி அமைக்க எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
9/10/2025 6:25:09 PM
திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நேமம், மேல்மா நகரை சேர்ந்தவர் டில்லி (55). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதன் வழியாக உயரழுத்த மின்சாரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மின்வாரிய அதிகாரிகள், இவரது விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த டவர் அமைப்பதற்காக அளவீடு செய்துள்ளனர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ‘எனது விவசாய நிலத்தில் டவர் அமைக்க கூடாது’ என வலியுறுத்தி கடந்த 5 மாதங்களாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், டில்லி, இன்று காலை நேமம் கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் விறுவிறுவென ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இதை அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர். இதற்கிடையில் தகவலறிந்து பூந்தமல்லி வட்டாட்சியர் ஏ.என்.குமார், நேமம் ஊராட்சி தலைவர் என்.எஸ்ஜே.பிரேம்நாத் மற்றும் வெள்ளவேடு போலீசார் விரைந்தனர். டில்லியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.