காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது
9/9/2025 5:39:02 PM
திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடா பவானிபுரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்புறத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, 1.47 கோடி ரொக்கப்பணம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது. விசாரணையில், காரில் வந்த 2 பேர், மேற்கு கோதாவரி மாவட்டம், நரசாபுரத்தை சேர்ந்த ஆனந்த்ராவ் மற்றும் ஹரிபாபு என்பது தெரிந்தது. இவர்களிடம் நரசாபுரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி பிரவீன் என்பவர், 50 லட்சம் மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார்.
மேலும் விஜயவாடாவில் உள்ள சிவானந்தத்திடம் 50 லட்சம், பரத்திடம் ₹20 லட்சம், உத்தமிடம் 15 லட்சம், திவாகரிடம் 12 லட்சம் என மொத்தம் 1.47 கோடியை வாங்கிக்கொண்டு, அந்த பணத்துடன் 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஐதராபாத்தில் உள்ள தனது சகோதரர் கீர்த்தியிடம் வழங்கும்படி பிரவீன் தெரிவித்துள்ளார். அதன்படி ஆனந்த்ராவும், ஹரிபாபுவும் பணம் மற்றும் அமெரிக்க டாலர்களை எடுத்து வந்துள்ளனர் என்பதும் வியாபாரம் சம்பந்தமாக சிவானந்தம் உள்ளிட்டோர் பணத்தை கொடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆனந்ராவ், ஹரிபாபு, நகை வியாபாரி பிரவீன் மற்றும் சிவானந்தம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், காருடன் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.