அரும்பாக்கத்தில் பரபரப்பு கத்திமுனையில் வியாபாரியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு
9/8/2025 6:14:35 PM
அண்ணா நகர்: காய்கறி வியாபாரியை வழிமடக்கி கத்திமுனையில் மிரட்டி சரமாரியாக தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(50). இவர் விருகம்பாக்கம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு அரும்பாக்கம் விநாயகபுரம் மெயின் ரோட்டில் சூப்பர் மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது, அந்த வழியாக மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உள்ளனர்.
அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திர அடைந்த மர்ம நபர்கள் இளங்கோவை சரமாரியாக தாக்கியதோடு, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த 2,000 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த காயத்துடன் சென்ற இளங்கோவன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.