ஓட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 13 பேர் மீது போலியாக ‘செக்ஸ் ராக்கெட் கேஸ்’ பதிவு செய்த மாஜி டிஎஸ்பி உட்பட 10 போலீசார் மீது வழக்கு
9/4/2025 2:32:46 PM
* உத்தரபிரதேச சிபிசிஐடி அதிரடி
* ஓய்வு பெற்ற டிஎஸ்பி மோகல் லால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் காசியாபாத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் போட்டியிட்டு தோற்றார்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஓட்டலில் பாலியல் தொழில் நடத்தியதாக கூறி பொய் ‘கேஸ்’ போட்ட மாஜி டிஎஸ்பி உட்பட 10 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக கூறி 13 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர், மேலாளர் உட்பட 13 பேர் தரப்பில் ேபாலீசாரின் கைது நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்ற உத்தரவுபடி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், அம்ரோஹாவில் ஓட்டலில் நடத்திய ரெய்டு, கைது நடவடிக்கை ெபாய்யான குற்றச்சாட்டின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஆதாரமற்றது என்று தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களின் அடிப்படை தகவல்கள் கூட ரெய்டின் போது போலீசார் உறுதிப்படுத்தப்படவில்லை. ஓட்டல் உரிமையாளர் தனது மாமன் மகளின் திருமண ஏற்பாடு குறித்து உறவினர்களுடன் பேசியதற்கான ஆதாரத்தை வழங்கி உள்ளார். ஓட்டலில் இருந்தவர்கள் அறை முன்பதிவு செய்து இருந்தார்களா? என்பதை கூட போலீசார் சரிபார்க்கவில்லை. போலீஸ் சமர்பித்த ஆவணங்களில் பல முரண்பாடுகள் இருந்தன. போலி ஆவணங்களை உருவாக்கி கைது செய்துள்ளனர் என்று சிபிசிஐடி கூடுதல் எஸ்பி பிரக்யா மிஸ்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி அப்போதைய போலீஸ் டிஎஸ்பியும் ஓய்வுபெற்ற அதிகாரியுமான மோகல் லால், துணை ஆய்வாளர்கள் விஜய் குமார் யாதவ், நீரஜ் குமார், வர்மா மற்றும் கான்ஸ்டபிள்கள் சுரேஷ்குமார், ஹிம்மத் சிங், கிருஷ்ணா பால் சவுகான், மோனு தோமர், சந்தியா தியாகி, ரிது டாக்கா ஆகிய 10 பேர் மீது தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேற்கண்ட 10 பேர் மீதும் ஐபிசி பிரிவுகள் 166 (அரசு ஊழியராக உள்ளவர் சட்டத்திற்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டது, காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டது), 203 (குற்றத்தை மறைக்க தவறான தகவல்களைத் தருவது), 342 (சிறைபடுத்தியது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது. ஆனால், சிபிசிஐடியின் குற்றச்சாட்டை நிராகரித்த மோகல் லால், ‘அம்ரோஹாவில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக வந்த புகாரையடுத்து ரெய்டு நடத்தப்பட்டது.
முழு நடவடிக்கையும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டது. ரெய்டு செய்யப்பட்ட வீடியோக்கள் செய்தி சேனல்களில் வெளியாகின. எங்கள் சோதனையில் எந்த தவறும் இல்லை. நாங்கள் தவறு செய்திருந்தால் அது வெளியே வரட்டும்’ என்றார். போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோகல் லால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் காசியாபாத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.