மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
8/14/2020 2:43:35 PM
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 83 தமிழக தோட்ட தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது வரை 55 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 16 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேற்று நிலச்சரிவு நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் மூணாறு அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின்னர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: நிலச்சரிவில் சிக்கிய அனைவருக்கும் வீடு கட்டிகொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசால் செய்ய முடியக்கூடிய அனைத்து உதவிகளும் செய்யப்படும். காயமடைந்தவர்கள் சிகிச்சை செலவையும், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசே ஏற்கும். தேயிலை நிறுவனத்தினரும் தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கவேண்டும். இது ெதாடர்பாக தேயிலை தோட்ட நிறுவனத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் கார் முன் பாய்ந்த பெண்
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் பினராயி விஜயன் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது மூணாறு பெ ண்கள் ஒற்றுமை இயக்க தலைவி கோமதி கார் முன் பாய்ந்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.