பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல்
8/10/2025 2:54:42 PM
புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறினார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அப்போது கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால், கடந்தாண்டு ஆக. 10ம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவர் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில், சோனியா காந்தியின் பதவிக்காலம் இன்றுடன் (ஆக. 10) முடிவடைவதையொட்டி, காங்கிரஸ் கட்சிக்கு புதியதாக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? அல்லது இடைக்கால தலைவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, காணொலி காட்சி மூலம் அளித்த பேட்டியில், ‘சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவிக் காலம் இன்று நிறைவடைவது உண்மையே. இருந்தாலும் கட்சியின் தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக அர்த்தமல்ல. சோனியா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவர். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். அதுவரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார்’ என்றார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் விடுத்துள்ள செய்தியில், ‘கடந்தாண்டு சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது நானும் வரவேற்றேன். ஆனால் அவர் நீண்டகாலம் சுமையை சுமக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது அல்ல. நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.