தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது
8/7/2025 2:28:41 PM
சென்னை: தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு பவுன் ரூ.41,568க்கும், 3ம் தேதி ரூ.41,592, 4ம் தேதி ரூ.41,616, 5ம் தேதி ரூ.42,592க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,374க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.42,992க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இந்த விலையை இன்று காலை விலை முறியடித்தது. அதாவது இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,420க்கும், பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு பவுன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: சர்வதேச நாடுகளில் தொடர்ந்து பொருளாதார பின்னடைவு நிலவி வருகிறது. இது புதிய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. அதாவது, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்யாமல் வைப்பு நிதியிலும் மற்றும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் பெரிய வருவாய் வருகிறது என்று எண்ண தொடங்கியுள்ளனர். இதனால், அவர்களும் தங்களுடைய முதலீட்டை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒரு காரணம். அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் மீட்சி அடைய நீண்ட காலம் ஆகும்.தங்கம் விலை தொடர்ந்து உயரும். விரைவில் பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.