திருக்குவளையில் நாளை கருணாநிதி சிலை திறப்பு: மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
8/6/2025 2:35:13 PM
கீழ்வேளூர்: திருக்குவளையில் நாளை காணொலி காட்சி மூலம் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லம் உள்ளது. அந்த இல்லம் தற்போது அன்னை அஞ்சுகம் படிப்பகமாகவும், முத்துவேலர் நூலகமாகவும் செயல்படுகிறது. இங்கு கருணாநிதியின் தாயார் அஞ்சுகம், தந்தை முத்துவேலர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆகியோரது சிலைகள் உள்ளன. இந்த இல்லத்தில் கருணாநிதி ஆட்சியில் செய்த சாதனைகள், வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு தலைவர்கள், தேசிய தலைவர்களுடன் உள்ள புகைப்படங்கள் மற்றும் திமுக மாநாட்டு படங்கள், கருணாநிதி எழுதிய கடிதங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னைஅஞ்சுகம் அறக்கட்டளை நிறுவனர் இயக்குநர் அமிர்தம், அறங்காவலர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏ.கே.எஸ். விஜயன், மேகநாதன், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஏற்பாட்டில் இங்கு கருணாநிதி உருவசிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கருணாநிதியின் மார்பு அளவு வெண்கல சிலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. தற்போது பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, நாளை( 7ம்தேதி) காலை 11 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.