மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
7/14/2020 3:02:52 PM
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ெவளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கின் கோர பிடியில் சிக்கிய அடித்தட்டு மக்கள்- ஏழை எளியவர்கள் எவ்வித வருமானமும் இன்றி, தேவைப்படும் எதையும் வாங்கும் சக்தியை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி- பண புழக்கத்தில் கடும் தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் உற்ற துணையாக இல்லை. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி வேலைக்கு செல்வோர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவுக்கே அவதிப்படும் நிலை ஏற்பட்டு- தங்களின் எதிர்காலம் எப்படி போகும் என்ற கவலையில் இருக்கிறார்கள்.
சென்னையில் கொரோனா குறைவதாக எண்ணிக்கைகள் வெளிவந்தாலும், ஏற்கனவே இறப்புகளை மறைத்த அதிமுக அரசு- இப்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை, வீடு திரும்பியவர்களில் எத்தனை பேர் கொரோனா நோய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள், மருத்துவமனையில் தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, அதில் எத்தனை பேர் வென்டிலேட்டரில் இருக்கிறார்கள் என்பது பற்றிய வெளிப்படை தன்மையான விவரங்களை அதிமுக அரசிடம் எதிர்பார்ப்பது வீண் வேலை என்ற நிலை உருவாகி விட்டது.
திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால்- மாவட்டங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால்- இன்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா கொத்து கொத்தாக பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. ஆகவே மாவட்டங்களில் வாழ்வாதார பிரச்சினை அச்சமூட்டும் வடிவம் எடுத்து- வருமான இழப்பு வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருக்கிறது. இப்படியொரு நெருக்கடியான சூழலில் இன்று கூடும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 பண உதவி வழங்குவது, கூட்டுறவு சங்கங்களில் உள்ள அனைத்து நகைக்கடன்களையும் ரத்து செய்வது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது- கொரோனா காலத்திற்கு வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிப்பது, சிறு,
குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும்- தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை அளிப்பது, மாணவர்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்வது ஆகியவற்றை பரிசீலித்து மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அமைச்சரவையில் ஆக்கபூர்வமான முடிவெடுத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை கேட்டு கொள்கிறேன். இவற்றை தவிர, மற்ற திட்ட செயலாக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு, டெண்டர் வெளியீடு, சமூகத்தை பாதிக்கும் திட்டங்களில் ஈடுபாடு ஆகியவை குறித்து நெருக்கடியான இந்த கால கட்டத்தில் விவாதிப்பதை தவிர்த்திடுதல் நன்று. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உணர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.