டாஸ்மாக் கடைகள் கணினிமயம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நிர்வாகம்
7/14/2020 2:57:04 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் கணினிமயமாகின்றன. இதுகுறித்து, டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது இருப்பு விவரம் மற்றும் குடோன்களில் மது இருப்பு ஆகியவை குறித்து சூப்பர்வைசர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு அதை தினம் தோறும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பித்து வந்தனர். இந்த நடவடிக்கைகளில் பல்வேறு குளறுபடிகள் எழுந்தது. கடை மேற்பார்வையாளர்கள் சரியான இருப்பினை தாக்கல் செய்வதில்லை என்று கூறப்பட்டது. எனவே, கடைகளில் நேரடியாக இருப்பு விவரங்களை காண முழுவதும் கணினிமயப்படுத்தும் நடவடிக்கையை கடந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த திட்டம் குறித்த அறிக்கையும் தயார் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளில் இருப்பு விவரங்களை தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிந்து கொள்வதற்காக கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்கவும், அனைத்து கடைகளையும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையும் தொழில்நுட்பம் மூலம் இணைக்கவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டம் நடைமுறைப்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பாக, கடைகளில் மதுபான இருப்பு, காலாவதியான மதுபானங்கள் எவ்வளவு, எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. குடோன்களில் இருந்து, மாவட்ட மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து நாம் இதை கண்காணிக்க முடியும். ஒவ்வொரு மதுபான பாட்டிலையும் விற்பனை செய்வதற்கு முன்பாக அதை பார் கோடு ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்த பிறகே இனி விற்பனை செய்ய முடியும். இதன்மூலம், கட்டாயமாக பில்லிங் செய்ய வேண்டும் என்ற நிலை கொண்டு வரப்படுகிறது. இதனால், அனைத்து கடைகளிலும் நாம் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர முடியும்.
ஒவ்வொரு கடைக்கும் 2 பார் கோடு ஸ்கேனர் கருவி கொடுக்கப்படும். இனிமேல் விற்பனை, மதுபான இருப்பு குறித்த விவரங்களை கடை மேற்பார்வையாளர்கள் நேரடியாக கொண்டுவந்து கொடுக்க தேவையில்லை. அனைத்தும் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டுவிடும். டாஸ்மாக் நிர்வாகத்திற்குள் மட்டுமே கணினிமயமாக்கப்படும். ஆன்லைனில் மது ஆர்டர் செய்து வாங்க இந்த நடவடிக்கை கிடையாது.
இதேபோல், கணினி மயம் என்றால் கடைகளில் கணினி இருக்காது. பில்லிங் இயந்திரத்துடன் இணைந்த கருவி மட்டுமே இருக்கும். அது மட்டுமே அனைத்தையும் ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் இனி பில்லிங் என்பது கட்டாயமாக்கப்படும். பார் கோடை ஸ்கேன் செய்து மட்டுமே இனி மதுவிற்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.