கொரோனா பரவலை கட்டுப்படுத்த தென்மாவட்டங்களில் கடும் ஊரடங்கு? இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
7/14/2020 2:51:01 PM
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தென்மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், இந்த ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இதனால், கொரோனா வைரஸ் வேகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
தமிழகத்தில் தினசரி 4,200 பேர் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உட்பட பல மாவட்டங்களில் ெகாரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் குறிப்பாக கிராம பகுதிகளில் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அங்கு, தினசரி கொரோனா பாதிப்பு எப்படி வந்தது என்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மற்ற மாவட்டங்களில் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது சென்னையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருந்தும் பாதிப்பு இன்னும் இருக்க தான் செய்கிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் முக கவசம் அணிவது, சானிடைசர், சோப் போட்டு கைகழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. இதனால் தான் மற்ற மாவட்டங்களில் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், மற்ற மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை கட்டுக்கள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 3 அமைச்சர்கள் தவிர அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில், சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்தாலும், தென்மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை கடுமையாக்குவது குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோன்று, தற்போது கிராமப்பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ம் தேதி முதலே தமிழகத்தில் நடைமுறைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு? சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், கே.பி.அன்பழகன், எம்ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கொரோனாவை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் தன்னார்வலர்கள் குழுவினர் அமைத்து அதன் மூலம் வீடு வீடாக சோதனை, கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனால், தான் சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தற்போது கொரோனா பரவி வரும் மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் அங்கே கொரோனா பரவலை கட்டுபடுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.