ஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கு; ஐகோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
7/13/2020 2:24:56 PM
புதுடெல்லி: ஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கை ஐகோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சிகளும் மனு தாக்கல் செய்தன. இம் மனுக்களை ஜூன் 11ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதற்கிடையே, மருத்துவர் டி.ஜி.பாபு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்த ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை நடத்தக்கூடாது. நடப்புக் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் அடிப்படையிலான சேர்க்கைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் சலோனி குமாரி வழக்கு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுக்கள் மீதான விசாரணையை மத்திய அரசு தடுத்து வருகிறது. சலோனி குமாரி வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் உள்ள மனுதாரர்களின் வழக்கில் இருந்து வேறுபட்டதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ‘தமிழக அரசின் மனு சலோனி குமாரி வழக்கிலிருந்து மாறுபட்டது. சலோனி குமாரி வழக்கு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஓபிசி வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டை 2006ம் ஆண்டு சட்டப்படி மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் நீட்டிக்கக் கோரும் வழக்காகும்.
இந்த வழக்கானது, தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினர், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமனங்கள், பதவிகள் இடஒதுக்கீடு) சட்டம் 1993’-இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு அளிக்கும் விதிகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் அமல்படுத்தக் கோருவதாகும்’ என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, சலோனி குமாரி வழக்கின் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக, மனு மீதான விசாரணையை இன்று (ஜூலை 13) ஒத்திவைத்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் பிற மனுதாரர்கள் (திமுக உள்ளிட்ட கட்சிகள்) தொடர்ந்த வழக்கும், சலோனி குமார் தொடர்ந்த வழக்கின் சாரம்சமும் வெவ்வேறாக உள்ளது. அதனால், தமிழக அரசு மற்றும் பிற மனுதாரர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்’ என்று உத்தரவிட்டது.