தங்க கடத்தல் ராணி சொப்னாவை 10 நாள் காவலில் எடுக்க என்ஐஏ முடிவு; ரிமாண்ட் அறிக்கையில் பரபரப்பு தகவல்
7/13/2020 2:18:46 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதாக, தூதரக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித்குமார், முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் என்ஐஏ, மத்திய உளவுத்துறை அமைப்புகளான ரா, ஐபி, வருவாய் புலனாய்வுத்துறை, சுங்க இலாகா, அமலாக்கத்துறை ஆகிய 5 அமைப்புகள் விசாரணை நடத்தின. அதைத் தொடர்ந்து நேற்று 4.30 மணியளவில் சொப்னாவும், சந்தீப் நாயரும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 3 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சந்தீப் நாயர் அங்கமாலியில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமுக்கும், ெசாப்னா சுரேஷ் திருச்சூரில் உள்ள முகாமுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ரிமாண்ட் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்கம் கடத்தலில் முக்கிய நபரான சொப்னா சுரேஷுக்கு கேரளாவில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டை ேசர்ந்த முக்கிய நபர்களுடனும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களை பலமுறை போனில் அழைத்து பேசி உள்ளார். இது தவிர சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள சிலருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் விவகாரம் என்பதால், கூடுதல் விசாரணை நடத்த வேண்டும். எனவே 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வந்த பரிசோதனை முடிவில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இந்த வழக்கில் முதலில் கைது ெசய்யப்பட்ட தூதரக முன்னாள் பிஆர்ஓ சரித்குமாரிடம் நேற்று பகல் முழுவதும் சுங்க இலாகா மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அக்காவுக்குதான் (ெசாப்னா சுரேஷ்) எல்லாம் தெரியும், கடத்தலில் தங்கம் எங்கிருந்து வருகிறது. அது யாருக்கு செல்கிறது என்ற விபரங்கள் அக்காவுக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில் மலப்புரத்தை சேர்ந்த ரமீஸ்க்கு சொப்னா சுரேஷுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவரை நேற்று இரவு சுங்க இலாகாவினர் கைது செய்து உள்ளனர். இவர் கேரள முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பியும், முஸ்லீம் லீக் முக்கிய தலைவர்களில் ஒருவரின் உறவினராவார்.
3 திருமணம் செய்த சொப்னா
சொப்னா சுரேஷ் சிறு வயதில் இருந்தே காதல் விளையாட்டுக்களை தொடங்கி விட்டார். இவர் பிறந்ததும், வளர்ந்ததும் துபாயில்தான். அங்கு 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, இவர் ஒரு பாதிரியாருடன் ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தபோது பாதிரியாருடன் மும்பையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் அங்கு சென்று ெசாப்னாவை கண்டுபிடித்து துபாய் அழைத்து சென்றனர். ஆனால் இதற்கு முன்பே இவரது குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது வீட்டாருக்கு தெரிந்ததை அடுத்து குடும்பத்தில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகுதான் பாதிரியாருடன் ஓட்டம் பிடித்தார்.
இதன்பிறகு திருவனந்தபுரம் திரும்பிய சொப்னாவுக்கு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மேயரின் உறவினருடன் திருமணம் நடந்தது. இதில் ஒரு மகள் பிறந்தார். ஆனால் ஒருசில ஆண்டுகளிலேயே அவர்களது உறவு முறிந்தது. அதன்பிறகு மகளுடன் கோவை சென்று விட்டார். அங்கு மதுபார் முதலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் திரும்பிய அவர் 3வதாக ஒருவரை திருமணம் செய்தார். அவர் மூலம் ஒரு மகன் பிறந்தார். அந்த கணவர்தான் தற்போது சொப்னாவுடன் உள்ளார்.