ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கவிழ்கிறது?...சச்சின் பைலட் தனிக்கட்சி; மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
7/13/2020 2:17:37 PM
ஜெய்ப்பூர்; ராஜஸ்தானில் அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் தனிக்கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அந்த மாநில காங்கிரஸ் ஆட்சி கவிழும் ஆபத்து எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு பாஜக-விடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்றனர். பதவி ஏற்றது முதல் இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி மிக வெளிப்படையாக இருந்து வருகிறது. ஆனால், ஆட்சிக்கு போதுமான பலம் இருந்ததால் காங்கிரஸ் கவலைப்படாமல் காலத்தை ஓட்டி வந்தது. ஆனால், தற்போது இருவருக்கும் இடையிலான அதிகார மோதல் முற்றிவிட்டது. நேற்று தனது ஆதரவாளர்கள் 30 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லி சென்றதில் இருந்தே ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
ஆனால், பாஜக அதனை மறுத்தது. நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தங்கள் வாக்குமூலங்களை அளிக்குமாறு முதல்வர், துணை முதல்வர், அரசின் தலைமை கொறடா மற்றும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில போலீஸ் சிறப்பு செயல்பாட்டுக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அந்த விவகாரம், தற்போது பூதாகரமாக உருவாகி வருகிறது. இதற்கிடையே மாநில அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும், அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு தலா ரூ.25 கோடி வரை எம்எல்ஏக்களை வளைக்க விலை பேசப்படுவதாகவும் முதல்வர் அசோக் கெலாட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் நேற்று மாலை அவரது இல்லத்தில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குடா வெளியிட்ட அறிக்கையில், ‘கெலாட் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. நாங்கள் இழப்பதை விட அதிகமான எம்எல்ஏக்களை பாஜகவிலிருந்து எங்கள் பக்கம் இழுப்போம்’ என்றார். பரபரப்பான சூழ்நிலையில் இன்று (ஜூலை 13) காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டம் காலை 10.30 மணிக்கு முதல்வர் கெலாட் வீட்டில் நடந்தது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் சிங் ராவந்த், பிரசாந்த் பைர்வா, டேனிஷ் அப்ரார், ரோஹித் போஹ்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஆனால், துணை முதல்வர் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் சச்சின் பைலட் தனது தலைமையில் தனியாக கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. புதியதாக ெதாடங்கவுள்ள கட்சிக்கு ‘பிரகதிஷீல் காங்கிரஸ்’ என்று பெயரிடப்படலாம் என்றும், தற்போது நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. அதேபோல மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசையும் பாஜ கவிழ்த்தது. அந்த இரு மாநிலத்திலும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இதனால் கொரோனாவையும் மீறி அரசியலில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.
எம்எல்ஏக்களின் பலம்
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் 13 சுயேட்சை எம்எல்ஏக்களில் 10 பேர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ராஷ்ட்ரிய லோக் தளம் எம்எல்ஏ, பாரதிய பழங்குடி கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர். பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் தவிர்த்து, ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது. தற்போது, துணை முதல்வர் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர், அக்கட்சியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் காங்கிரஸ் பலம் குறையும் என்பதால், முதல்வர் கெலாட் தலைமையிலான அரசு நீடிக்குமா? என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.