சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை சிபிஐ விசாரணை தொடங்கியது
7/10/2025 2:41:48 PM
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ போலீசார் இன்று விசாரணையை துவக்கினர். அவர்களிடம் வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் முறைப்படி ஒப்படைத்தனர். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாகக் கூறி அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் கொடூரமாக தாக்கினர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது, தெரியவந்தது.
அதே போல் ஏட்டு ரேவதி சாட்சியத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் எஸ்எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீசார் ெவயிலுமுத்து, தாமஸ்பிரான்சிஸ் ஆகிய 5 பேரையும் நேற்றுமுன்தினம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களில் எஸ்எஸ்ஐ பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 2 பேரும் உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லத்துரை, சாமித்துரை, வெயிலுமுத்து ஆகியோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே பரிந்துரை செய்திருந்ததால், அதன்பேரில் புதுடெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜூன் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், கொலை செய்தல், தடயங்களை அழித்தல் ஆகிய சந்தேகப்படும்படியான குற்றங்கள் நடந்திருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்த 176 (1-ஏ),(1) பிரிவில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘சிபிஐ ஏடிஎஸ்பி சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் 10ம் தேதி (வெள்ளி) முதல் விசாரணையை துவக்குகின்றனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், சிபிசிஐடி தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். கைதானவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கையை சிபிஐ அல்லது சிபிசிஐடி தரப்பில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 28க்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை மதுரை வந்தனர். பின்னர் மதுரையிலிருந்து காரில் புறப்பட்டு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.