ரூ.13.5 கோடி தங்கம் கடத்திய வழக்கு; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு...சொப்னா தொடர்ந்து டிமிக்கி
7/10/2025 2:40:45 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ரூ.13.5 கோடி மதிப்பு தங்கம் கடத்திய விவகாரத்தில் தீவிரவாத கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரணை நடத்த உள்ளது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்க கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது. இது தொடர்பாக தங்கத்தை கடத்தியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் இதன் பின்னணியில் செயல்படுபவர்கள் யாரும் இதுவரை பிடிபடவில்லை. பெரும்பாலும் அவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதால் அவர்களை சுங்க இலாகாவினர் நெருங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதற்கட்ட விசாரணையிலேயே இந்த கடத்தலில் தீவிரவாதிகளுக்கு பங்கு இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து தங்கம் கடத்தல் வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி நேற்று இரவு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்றே விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சொப்னா சுரேஷை கடந்த 5 தினங்களுக்கும் மேலாக சுங்க இலாகாவினர் தேடி வருகின்றனர். ஆனால் அவர் எங்குள்ளார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது மகள் மற்றும் மகனுடன் தலைமறைவாகி விட்டார் என தெரிகிறது. இந்நிலையில், பாலோடு அருகே பெரிங்கம்மலையிலுள்ள ஒரு எஸ்டேட்டில் சொப்னா பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு ஏராளமான எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த பகுதியை சுங்க இலாகாவினர் கண்காணித்து வருகின்றனர். சொப்னாவின் மகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று அவர் தன்னுடன் படிக்கும் தோழியை போனில் அழைத்ததாக சுங்க இலாகாவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சொப்னா சுரேஷ் பதுங்கி இருக்கும் இடம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
போலி சான்றிதழ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பி.காம் சான்றிதழைதான் ஐக்கிய அரசு அமீரக தூதரத்தில் நிர்வாக செயலாளராக பணியில் சேர்ந்தபோதும், கேரள அரசின் ஐடி துறையில் பணிக்கு சேர்ந்தபோதும் ெசாப்னா சுரேஷ் அளித்திருந்தார். இந்த நிலையில் சொப்னா சுரேஷ் 10ம் வகுப்புகூட தேர்ச்சி அடையவில்லை என அமெரிக்காவில் உள்ள அவரது அண்ணன் பிரைட் சுரேஷ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சொப்னா சுரேஷ் அளித்தது போலி சான்றிதழ் எனவும், அந்த பல்கலையில் பிகாம் படிப்பே இல்லை எனவும் தெரியவந்தது.
7 நாள் கஸ்டடி
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமாரை விசாரணைக்கு பின்னர் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.