கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் கொரோனாவுக்கு 29 பேர் பலி
7/7/2025 2:27:34 PM
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 29 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது வரை சென்னையில் 70,017 பேர் உட்பட மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1747 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 1571 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 1082 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 61 பேர்உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில் தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும், சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புள்ளவர்கள்தான் அதிகம் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை கூறி வந்தது. ஆனால், கடந்த சிலநாட்களாக எந்த வித பாதிப்பு இல்லாதவர்களும் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். இது, மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 30 வயதுக்குட்பட்டோரும் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த 65 வயது முதியவர், கொரட்டூரை சேர்ந்த 62 வயது முதியவர், புழுதிவாக்கத்தை சேர்ந்த 66 வயது முதியவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த 78 வயது முதியவர், பாடியை சேர்ந்த 78 வயது மூதாட்டி, பெரியமேட்டை சேர்ந்த 69 வயது மூதாட்டி உள்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், 67 வயது முதியவர், புழலை சேர்ந்த 67 வயது முதியவர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 54 வயது ஆண், திருவள்ளூர் மாவட்டம் பெனவூர்பேட்டையை சேர்ந்த 62 வயது முதியவர், புழலை சேர்ந்த 38 வயது ஆண், கொளத்தூரை சேர்ந்த 72 வயது மூதாட்டி என 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே போன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 74 வயது முதியவர், எம்ஜிஆர் நகரை சேர்ந்த 78 வயது முதியவர், கொருக்குப்பேட்டையை சேர்ந்த 74 வயது முதியவர், மயிலாப்பூரை சேர்ந்த 76 வயது மூதாட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த 52 வயது முதியவர் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்து ஒரு வித அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.