கொரோனா வினால் மூச்சு திணறல் பாதிப்பு அதிகரிப்பு; அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக அமைப்பு: உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
7/7/2025 2:23:25 PM
சென்னை:கொரோனா பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்ைக அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தற்போது வரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்படுவர்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, குறைவான பாதிப்பு, நடுநிலையான பாதிப்பு, அதிகமான பாதிப்பு என்ற அடிப்படையில் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில், குறைவான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தும், நடுநிலை மற்றும் அதிகமான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தங்களின் பாதிப்பை வெளியே சொல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர்.
அவர்கள் பாதிப்பு அதிகமான பிறகு தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். மூச்சுத்திணறல்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் ஆக்ஸிஜன் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பேரில், 31 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 162 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது.
குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 கிலோ லட்சம் லிட்டர் வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 20 கிலோ லட்சம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது. அதே போன்று ஸ்டான்லி மருத்துவமனையில் 10 கிலோ லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் தற்போது 10 கிலோ லட்சம் லிட்டர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 13 கிலோ லட்சம் லிட்டர், ஓமந்தூரர் அரசு மருத்துவமனை 13 கிலோ லட்சம் லிட்டர், ராயப்பேட்டை 6 கிலோ லட்சம் லிட்டர், கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனையில் 6 கிலோ லட்சம் லிட்டர், தாம்பரம் மருத்துவமனையில் 6 கிலோ லட்சம் லிட்டர், மதுரை மருத்துவகல்லூரியில் 20 கிலோ லட்சம் லிட்டர் என மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.