கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி
7/6/2025 2:34:05 PM
சென்னை: கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 33 வயதே ஆன ஆயுதப்படை காவலர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உயிர்களை பலி வாங்கி வருகிறது. தமிழகத்திலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளித்து வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பலர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது காவல் துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று காவல் துறையில் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கொரோனா தொற்றால் சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்டார். இவர் வேப்பேரி காவல் நிலைய ஆயுதப்படையில் இருந்து அயல் பணியாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் வேப்பேரி கார்பரேஷன் அலுவலகத்தில் ெகாரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் நாகராஜனுக்கு கடந்த 4ம்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு நாகராஜன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாகராஜனுக்கு 33 வயதே ஆன நிலையில், கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பது காவல் துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அம்மாப்பட்டி. இவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் ஏராளமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றும், பலர் சிகிச்சை முடித்து மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர். காவல் துறையில் இதுவரை 3 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.