சென்னையில் வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 158 ஆக உயர்வு: தண்டையார் பேட்டையில் அதிகரிப்பு
7/6/2025 2:32:00 PM
சென்னை: சென்னையில் வைரஸ் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகரட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்படி சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. 200க்கு மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 60 ஆக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் வைரஸ் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 58 கட்டுப்பாடு பகுதிகள் உள்ளது.
இதில் 10க்கு மேற்பட்ட தெருக்கள் கடந்த 7 நாட்கள் முன்பு முதல் வைரஸ் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 43 பகுதிகளும், கோடம்பாக்கம் மண்டத்தில் 13 தெருக்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 தெருக்களும், அடையாறு மண்டலத்தில் 10 தெருக்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 8 தெருக்களும், திரு.வி.நகர் மண்டலத்தில் 7 தெருக்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4 தெருக்களும் நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் இந்த தெருக்களில் புதிய தொற்றுகள் பதிவு ஆகாமல் இருந்தால் இந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து விலக்கி கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தது.