கொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்
7/5/2025 2:47:16 PM
புதுடெல்லி: கொரோன தடுப்பு மருந்து குறித்து புதிய சர்ச்சை கிளம்பியதால், பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐசிஎம்ஆர் உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துடன் இணைந்து புதிய தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. ஊசி மூலம் செலுத்தக் கூடிய இந்த மருந்து குறித்த சோதனைகள் நடைபெற உள்ளன. இந்த பரிசோதனைக்காக நாடு முழுவதும் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யபட்டுள்ளன. இவற்றில் ஒன்று சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ளது.
இதைதவிர, விசாகப்பட்டினம், ரோடக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர், ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர், மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் சோதனை நடக்க உள்ளது. இந்த மருத்துவமனைகள் இந்த சோதனை தொடங்க தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இந்த சோதனைகளை விரைவு படுத்தி ஆக. 15ம் தேதி முதல் சிகிச்சையைத் தொடங்க ஐசிஎம்ஆர் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளது. ஆனால், அவசரகதியில் கொரோனா தடுப்பூசி வெளியிட ஐசிஎம்ஆர் செயல்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்பு முக்கியம் என்பதில் எவ்வித சமரசமும் கிடையாது. இதற்கான சோதனைகள் அனைத்தும் சர்வதேச விதிமுறைகளின் படியே நடக்கும் என்பதை உறுதியாக கூறுகிறோம். இந்த விதிமுறைப்படி விலங்குகள், மனிதர்கள் ஆகியோரிடம் சோதனை நடக்கும். விதிமுறைகளின்படி தொடர் ஆய்வு, பரிசோதனைக்கு பின்னரே நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டுள்ளது.