தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்
7/5/2025 2:42:13 PM
* தேவையில்லாமல் நடமாடியவர்கள் மீது வழக்கு
* முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின
சென்னை: தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தேவையில்லாமல் நடமாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்பட்டது. மருத்துவ சேவை சார்ந்த வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,07,001 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தவிர்த்து ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன்படி இன்று மற்றும் 12, 19,26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த உத்தரவின்படி இந்த மாதத்திற்கான முதல் முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பால் மற்றும் மருந்து கடைகள், பத்திரிகை விற்பனையகம் மட்டும் வழக்கம் போல் இயங்கியது. மேலும் அரசு அனுமதி அளித்துள்ள வாகனங்கள் மற்றும் பால் மற்றும் மருத்துவ பணிகள் சார்ந்த வாகனங்கள் மட்டும் சாலைகளில் ஓடின. அந்த வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பிறகு தான் அனுமதித்தனர். இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்கு தவிர யாரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து இருந்தனர். அதையும் மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. அதைப்போன்று நடந்து செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்து தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விதிகளை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னையின் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த முக்கிய சாலைகளை இணைக்கும் சாலைகளையும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. அதையும் மீறி காரணங்களே இல்லாமல் சாலைகளில் சென்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப் பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் நகரின் உள்பகுதிகளில் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதைத்தவிர்த்து “ட்ரோன்” காமிரா மூலம் அனைத்து தெருக்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும், ஊரடங்கு நீடித்தாலும், நாளை முதல் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதே நேரத்தில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
மதுரையில் மட்டும், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும். மேலும் தேநீர் கடைகள் (பார்சல் சேவை மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படும்.
வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். மேலும் மற்ற செயல்பாடுகளைப் ெபாறுத்தவரை ஜூன் 19ம் தேதிக்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.