தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
6/27/2020 2:26:31 PM
சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நீடித்த கோடை வெயில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கியது. அரபிக்கடல் பகுதியில் கடந்த மாதம் உருவான நிசர்கா புயல் காரணமாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியது. படிப்படியாக இந்த பருவமழை வட மாநிலங்களிலும் தீவிரம் அடையத் தொடங்கியது. தற்போது தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கிவிட்டது. இதையடுத்து, கேரளாவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா, மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தமிழகத்தில் காரையூரில் 130 மிமீ, கொடுமுடி, எருமைப்பட்டி, சங்கராபுரம் 110 மிமீ, புள்ளம்பாடி, பஞ்சப்பட்டி, தல்லாகுளம் 100 மிமீ மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இது தவிர, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும். இதையடுத்து, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு அடுத்த நாட்களிலும் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.