சீன தாக்குதலில் இந்திய வீரர் பலி மகனின் வீர மரணத்தை கவுரவமாக கருதுகிறேன்: தாய் கண்ணீர் பேட்டி
6/17/2020 2:43:07 PM
திருமலை: மகனின் வீரமரணத்தை எண்ணி பெருமைப்படும் அதே வேளையில் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தாய் பேட்டி அளித்தார். இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதில் தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ்பாபு என்பவரும் வீர மரணமடைந்தார். பீகார் 16வது பட்டாலியனை சேர்ந்த சந்தோஷ்பாபு பல ஆண்டுகளாக சீன எல்லையில் பணியாற்றி வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஊரடங்கு காரணமாக செப்டம்பரில் ஐதராபாத் வருவதாக இருந்த நிலையில் வீர மரணம் அடைந்தார். இவருக்கு சந்ேதாஷ்வி என்ற மனைவியும் அனிருத்(4) என்ற மகனும் அபினயா(9) என்ற மகளும் உள்ளனர்.
வீரர் சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா கூறியதாவது; எனது மகனை ராணுவ வீரராக பார்க்க வேண்டும் என்பதற்காக சிறுவயது முதலே ராணுவ பள்ளி, ராணுவ அகாடமி, இந்திய அகாடமியில் படிக்க வைத்தேன். 37 வயதில் சிறந்த முறையில் பணி புரிந்ததற்காக பதவி உயர்வு கிடைத்தது. 3 மாதங்களில் ஐதராபாத்துக்கு பணியிடம் மாற்றம் செய்து வருவதாக தெரிவித்தான். பல ஆண்டுகளுக்கு பிறகு எங்களிடம் வருகிறான் என்று மகிழ்ச்சியுடன் காத்திருந்தோம். எல்லையில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்துவிட்டான். நாட்டிற்காக வீரமரணம் அடைந்தது கவுரவமாக கருதுகிறேன். இருந்தாலும், ஒரு தாயாக இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தார்.