இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 20 ராணுவ வீரர்கள் பலியானது எப்படி?
6/17/2020 2:41:16 PM
* இருதரப்பிலும் 700 பேர் நேருக்குநேர் தாக்குதல்
* நிலைமையை கண்காணிப்பதாக அமெரிக்கா தகவல்
புதுடெல்லி: இந்தியா-சீனா இடையிலான லடாக் எல்லைப் பிரச்னையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் கடந்த 5 வாரங்களாக இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர். இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தும் பதற்றம் தணியவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சு நடத்தப்பட்டு, இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு ெசய்யப்பட்டது. இந்நிலையில் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியானது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப்பின் இந்திய-சீன ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தீவிரமாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாஷிங்டனில் அளித்த பேட்டியில், ‘இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே எல்லையில் ஏற்பட்ட பிரச்னையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இருநாடுகளும் மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் இருந்து, பிரச்னைகளுக்கு அமைதியான முறையில், பேச்சின் மூலம் தீர்வு காண அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. கடந்த 2ம் தேதி இந்திய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலில் இந்திய-சீன எல்லை பிரச்னை குறித்தும் பேசப்பட்டது’ என்றார். கடந்த மே 5ம் தேதி முதல் லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையிலான சூழ்நிலை பதற்ற நிலையில்தான் இருந்தது. ஆனால் நிலைமை மிகவும் மோசமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் 20 வீரர்கள் துப்பாக்கிச் சூடு இல்லாமல் மரணம் அடைந்துள்ளனர். இந்த மோதலில் சீனா எவ்வளவு சேதத்தை சந்தித்தது என்பதை அந்நாடு மறைத்து வைத்திருக்கிறது. ஜூன் 15 அன்று மாலையில், திடீரென சீன வீரர்கள் இந்திய அதிகாரி மற்றும் அவரது இரண்டு வீரர்களைத் தாக்கினர். இருபுறமும் சுமார் 700 வீரர்கள் கூடியிருந்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், வீரர்கள் ஒருவருக்கொவர் கைகள், கற்கள், கம்புகள், இரும்பு ராடுகளை கொண்டு மோதிக் கொண்டனர். லடாக்கின் கல்வான் பகுதியில் மாலை முதல் நள்ளிரவு வரை இந்த மோதல் நீடித்தது. முன்னதாக திங்கள்கிழமை காலை லடாக்கில் இருந்த சீன கர்னலிடம், இந்திய கர்னல் சந்தோஷ் பாபு பேசினார். மாலையில் நிலைமையைப் பற்றி பேசிக் ெகாள்ள முடிவெடுத்த நிலையில் இந்திய ராணுவ அதிகாரிகள் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள பிபி-14-க்கு சென்றனர். அங்கிருந்து சீன துருப்புக்கள் பின்வாங்க வேண்டும் என்று இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. அப்போது அங்கு 1,012 சீன வீரர்கள் இருந்தனர். திடீரென்று மேலும் பல வீரர்கள் வந்தனர். அப்போது, இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டனர். இந்திய வீரர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர். சுமார் 600 முதல் 700 வீரர்கள் மோதிக் கொண்டனர். இந்த ரத்தக்களரி மோதல் சுமார் ஒரு பட்டாலியனுக்கு இடையே நடந்தது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
சீனா ஒப்புக் கொண்டது
சீனா நீண்ட காலமாக தங்கள் எல்லையில் தன்னை பலப்படுத்தி வருகிறது. அங்கு 6 ஆயிரம் வீரர்கள், பீரங்கித் துப்பாக்கிகளுடன் படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வானில் இந்தியா தரப்பு சாலை கட்டுமான பணிகளை தொடங்கியது, சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது எல்லையை கடக்க வேண்டாம் என்று சீனா எச்சரித்தது. சீன வெளியுறவு அமைச்சகம் திங்களன்று இரண்டு முறை இந்திய துருப்புக்கள் எல்லைக்கோட்டில் சீன வீரர்களை தாக்கியதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இரு படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மூன்று இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை கூறிய சீனா, தங்கள் தரப்பு இழப்பு குறித்து எதுவும் கூறவில்லை. சீன அரசாங்க பத்திரிகையான குளோபல் டைம்ஸ், ஐந்து சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொண்டது. அந்த பத்திரிகையின் ஆசிரியர், சீன தரப்பினரும் தங்கள் உயிர்களை இழந்துள்ளதாக டுவிட் செய்துள்ளார்.
மத்திய அரசு விளக்கம்
லடாக் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ‘இரு தரப்பு உயர் மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புக்கொண்ட விஷயத்தை சீனா மீறாமல் இருந்தால் இந்த பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இந்தியாவின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்ட எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு உள்ளாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியை, சீன துணை வெளியுறவு அமைச்சர் லூ சாஹூய் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.