18 எம்பிக்களை தேர்ந்தெடுக்க 1,000 எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர் நாளை மறுநாள் மாநிலங்களவை தேர்தல்: கொரோனா பாதித்த எம்எல்ஏக்களுக்கு தனி வாக்குச்சாவடி
6/17/2020 2:40:38 PM
புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 18 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதில் 1,000 எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா பாதித்த எம்எல்ஏக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களவையில் ஏற்பட்டுள்ள எம்பிக்கள் காலியிடங்களை நிரப்புவதற்கானத் தேர்தலை கடந்த மார்ச் 26ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. மொத்தம் 55 உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 18 உறுப்பினர் இடங்களுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடத்த இருந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவல் அபாயம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திரம் (4), குஜராத் (4), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று, மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நாளை மறுநாள் (ஜூன் 19) தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மாலையே தொடங்கும். அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்படும். கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு இடையே முதன்முறையாக நடத்தப்படும் தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் முறையில் சில மாற்றங்களை செய்து, அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சிறப்பு தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளது.
நாளை மறுநாள் நடக்கும் வாக்குப்பதிவில் ஆந்திரா, குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். அதனால், தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மற்றும் தனி வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதாரத் துறையும் தேர்தல் அதிகாரிகளுடன் இதற்கான பணிகளை மேற்ெகாண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் வாக்களிக்க தகுதியுள்ள ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்த பின்னர் அவர் கடைசியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். பாதிக்கப்பட்ட எம்எல்ஏவை அழைத்து வர, தனி வாகனம் அனுப்பப்படும். அவருக்காக தனி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் 4 எம்எல்ஏக்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் 3 பேர். ஒருவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் இல்லை என்றாலும், கொரோனா அறிகுறி உள்ள எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத் துறை அனுமதியின் பேரில், அவர்கள் வாக்களிக்க உள்ளனர். முகக்கவசம், கைகழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைக்கு பின்னரே எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிப்பது ெதாடர்பான சுகாதார விதிமுறைகள் அடங்கிய புத்தகமும் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.