இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலி 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் நவம்பரில் உச்சத்தை தொடும்: ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்கள்
6/15/2020 2:32:17 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பர் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இன்றைய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,521 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்குமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சார்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தொற்று பரவல் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியது. தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கால அவகாசம் அளித்தது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரையில் அதன் தேவையை பூர்த்தி செய்யும். அதன் பிறகு, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்பதால் தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகள் 5.4 மாதங்களுக்கும், தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகள் 4.6 மாதங்களுக்கும், உயிர்காக்கும் கருவிகள் 3.9 மாதங்களுக்கும் தட்டுப்பாட்டுடன் இருக்கும். இருந்தும், இந்தப் பற்றாக்குறை என்பது ஊரடங்கு மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இருந்ததைக் காட்டிலும் 83 சதவீதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
நோய்த் தாக்கத்தின் வேறுபாட்டுக்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கையால் எதிர்பாராமல் உருவாகும் தேவைகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க முடியும். பொது சுகாதார நடவடிக்கை 80 சதவீத அளவுக்கு அதிகரிப்பட்டால், நோய்த் தொற்றின் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. ஊரடங்கு காலத்தில் கொரோனா பரிசோதனை, சிகிச்சை முறை மற்றும் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கான கண்காணிப்பு ஆகியவை கூடுதலாக மேம்படுத்தப்பட்டிருந்தால், நோய்த் தொற்று உச்சத்திலிருக்கும்போது பாதிக்கப்பட்டவா–்களின் எண்ணிக்கை 70 சதவீத அளவுக்கு குறைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கொரோனா காரணமாக இந்தியாவில் போடப்பட்ட ஊரடங்கு கொரோனா தொற்று உச்சத்தை அடைவதற்கான கால அளவை நீட்டித்துள்ளது. அதாவது, 37 நாட்களில் கொரோனா உச்சத்தை அடையும் என்ற நிலையானது, ஊரடங்கு காரணமாக 74 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த ஊரடங்கு தொற்றின் பாதிப்பை 97%ல் இருந்து 69% ஆக குறைத்துள்ளது. இந்த கால அவகாசத்தில் நாம் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை 60% செயல்திறனுடன் இயங்கினால், நவம்பர் முதல் வாரம் வரை கொரோனா தடுப்பு தேவைகளை சமாளிக்க முடியும். ஐசியூ படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவையை 83% வரை குறைக்க முடியும்.
உயிரிழப்புகளைப் பொருத்தவரை 60 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள், தீவிர சிகிச்சை மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு திட்டங்களை மறுஆய்வு செய்தல், மருத்துவ வசதிகளை பலப்படுத்துவதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும். எப்படியாகிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தனிமைப்படுத்தப்படுபவர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே, இதிலிருந்து மீள முடியும். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.