காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாற்று இடத்தில் இன்று முதல் மீன் விற்பனை தொடக்கம்: முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கை
6/7/2025 2:40:00 PM
தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிகநகர் ஆகிய மண்டலங்களில் அதிகளவில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. மேலும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்குவதற்காக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் வருவதால் வைரஸ் தொற்று ஏற்படும் நிலை உருவானது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க காவல்துறை தடைவிதித்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் டிஜிபி திரிபாதி, மாநகர கமிஷனர் விஸ்வநாதன், மீன் வளத்துறை இயக்குனர் சமீர் ஆகியோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்து, மீன் விற்பனை செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மாற்று இடத்தில் மீன் விற்பனை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்காக வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர். அந்த பகுதியில் தடுப்பு அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்வாங்கி செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் வந்தவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். மீன் வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.