வங்கி மோசடி செய்து இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மல்லையா இன்னும் இந்தியா வரவில்லை: விரைவில் விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைப்பு
6/4/2025 2:42:28 PM
மும்பை: பல கோடி ரூபாய் வங்கி மோசடி செய்து இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மல்லையா, இன்னும் இந்தியா அழைத்துவரப்படவில்லை. ஆனால், விரைவில் இந்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. ‘கிங் பிஷர்’ விமானத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா, 17க்கும் மேற்பட்ட வங்கிகளில் கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி தராமல் இவர் கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். இதனையடுத்து மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், இதனை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப். 20ம் தேதி அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து அவர் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் மே 14ம் தேதி நிராகரித்த நிலையில் விஜய் மல்லையா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஏற்கனவே, மல்லையாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கு அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராக மும்பைக்கு அழைத்து வரப்படுவார் என்றும்,
மும்பை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் நேற்றிரவு தகவல் வெளியானது. ஆனால், விஜய் மல்லையா இந்தியாவுக்கு இன்னும் அழைத்து வரப்படவில்லை என்றும், அவர் எந்த நேரத்திலும் இங்கிலாந்து அரசால் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் சார்பில் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன. மல்லையாவை மீண்டும் இந்தியா அழைத்து வர லண்டனுக்கு எந்த குழுவும் செல்லவில்லை.
இங்கிலாந்தில் அவருக்காகன சட்டரீதியான தீர்வுகள் எதுவும் இல்லாததால், அவரே சொந்தமாக இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது. மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலை குறித்து இங்கிலாந்து நீதிமன்றம் விரிவான அறிக்கையை கோரியது. அதன் அடிப்படையில் சிறைச்சாலை வீடியோவுடன் சிபிஐ விவரங்களை இங்கிலாந்து நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தது’ என்று கூறினர்.