புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
6/1/2025 3:54:54 PM
புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விசயத்தில், ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 1ம் தேதியில் இருந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாற்பது சதவீத ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், பல ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும், ரயில் பயணிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வந்துள்ளன. இதற்கிடையே ரயில்வே போலீசாரின் தரவுகளின்படி, ரயில் பயணத்தின் போது 80 தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்ப்பிணிகள், நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் சிறப்பு ரயில்களில் செல்ல வேண்டாம். அவசியம் கருதினால் மட்டுமே பயணிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட் செய்துள்ளார்.
அதில், ‘பலவீனமானவர்கள் ரயிலில் பயணம் செய்யக்கூடாது என்ற ரயில்வே அமைச்சகத்தின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இந்த நேரத்தில், அவர்களை ரயில்வே அமைச்சகம் முன்னுரிமை கொடுத்து கையாண்டிருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.