68 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பஸ், ரயில்கள் ஓடின: சென்னையில் இன்று ஆட்டோ, டாக்சிகள் இயக்கம்
6/1/2025 3:38:00 PM
சென்னை: மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில், சென்னை மண்டலம் தவிர்த்து தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில்களும் இயங்கின. சென்னையில் ஆட்டோ, டாக்சிகளுக்கு மட்டும் உரிய விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவை இன்று ஓடத்துவங்கின. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 5ம் கட்டமாக நீடிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த தளர்வு நடவடிக்கைகள் ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மண்டலத்தில் தான் தற்போது அதிக அளவில் கொரோனா பரவல் உள்ளது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தான் இந்நோய் தாக்கத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியபட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாகிறது. ஆனால் சென்னையில் அப்படி அல்ல. கட்டுக்கடங்காமல் நாள்தோறும் நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் என்பது சென்னையில் தான் அதிகமாக உள்ளது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். இதனால் நோய் தொற்று எண்ணிக்கை கூடுகிறது. பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சுகாதாரத்துறையும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட 5ம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மண்டலம் தவிர்த்து மாநிலம் முழுவதும் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்பட்டது. பேருந்தின் மொத்த இருக்கைகளில், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று காலை முதல் சென்னை மண்டலம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க தொடங்கின. காலை முதல் பயணிகள் பலர் ஆர்வத்துடன் பயணித்தனர். முககவசம் இல்லாத பயணிகளை பேருந்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் ஆட்டோ, டாக்சிகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மட்டுமே இவற்றை இயக்க முடியும். விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே மண்டலத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உரிய விதிகளுக்குட்பட்டு இன்று காலை முதல் சென்னையில் இந்த வாகனங்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று இன்று முதல் தமிழகத்தில் ரயில் சேவையும் தொடங்கியது. குறிப்பிட்ட 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு ரயில்வே வாரியத்துக்கும் வேண்டுகோள் விடுத்தது.
அதன் அடிப்படையில், அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் கோவை- மயிலாடுதுறை, மதுரை- விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால் பல பயணிகள் ரயிலில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சென்னையில் பஸ்கள் இயக்கப்படாததால், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தினக்கூலி ஊழியர்களும் பஸ், ரயில்கள் இயக்கப்படாததால் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆனால் மாநிலங்களில் மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தமிழகம் முழுவதும் கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னையில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. முதல்நாள் என்பதாலும், பீதியாலும் கடைகளில் குறைந்த அளவே பொதுமக்கள் வந்து சென்றனர். வியாபாரம் குறைந்த அளவே இருந்தது. ஓரிரு நாளில் வியாபாரம் பழைய நிலையை எட்டும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சென்னையில் வழக்கத்தை விட இன்று கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.
உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பீதியுடனும், அச்சத்துடனும் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.