திருமணமான 5 மாதத்தில் ஐசிஎப் ஊழியர் தற்கொலை
3/17/2020 2:54:40 PM
திருநின்றவூர்: திருமணமான ஐந்தாவது மாதத்தில் ஐசிஎப் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஆவடியை அடுத்த திருநின்றவூர், கெங்குரெட்டிகுப்பம், ஜெயராம் நகரை சேர்ந்தவர் கோபி (24). இவர், சென்னை ஐ.சி.எப்பில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். இவரது மனைவி சத்யா (21). இவர்களுக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டதால் சத்யா கோபித்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு நேற்று காலை கோபி சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த கோபி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநின்றவூர் போலீசார் சென்று கோபியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.